கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

வியாழன், 12 பிப்ரவரி, 2015

வருமுன் காக்கும் ஜப்பான்!

ஜப்பான், எந்தளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது, என்பதற்கு இந்த சம்பவம், ஒரு உதாரணம். சமீபத்தில், இரு ஜப்பானியர்களை, இஸ்லாமிய பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் தலை துண்டித்து கொன்றதும், உலகம் அறிந்ததே.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியை அந்நாட்டு அரசுக்கு ஏற்படுத்திய இந்த விவகாரத்தால், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜப்பான் மேற்கொண்டுள்ளது. சிரியா உள்ளிட்ட, பிரச்னைக்குரிய நாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டவர் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அனைவருக்கும் அவ்வளவு சீக்கிரம் அனுமதியும் வழங்குவதில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகே, அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கிறது.
பிரச்னைக்குரிய இடங்களுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது.
அமெரிக்க கூட்டுப்படை நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்யும் ஜப்பானுக்கு, பயங்கரவாதிகள் விடுத்திருக்கும் நேரடி மிரட்டலே இதற்கு முக்கியக்காரணம்.
கடந்த வாரம், சுஜிமாட்டோ என்ற பத்திரிகை புகைப்படக்காரர், சிரியா செல்வதற்கு முயற்சிப்பதை அறிந்த ஜப்பான் வெளியுறவுத்துறை, பயணத்துக்கு தடை விதித்ததுடன், உடனடியாக அவரது பாஸ்போர்ட்டை பறிமுதலும் செய்து விட்டது.
அரசு உத்தரவை மீறும் பட்சத்தில் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் ஜப்பானிய சட்டத்தில் வாய்ப்புள்ளது. பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு, தானாக விரும்பிச் சென்று ஒருவர் பிடிபட்டு விட்டாலும், அவரை மீட்பதற்கான தார்மீக கடமை அரசுக்கு இருக்கிறது.
அந்த வகையில், பத்திரிகையாளரின் உயிரை காப்பதற்கான கடமையை கொண்டிருப்பதாலேயே, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
ஆர்வக்கோளாறு ஆசாமிகள், வலியச்சென்று பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு, அரசுக்கு உள்நாட்டில் நெருக்கடி ஏற்படுத்துவதை தவிர்க்கவே இந்நடவடிக்கையை பிரதமர் அபி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன், பயங்கவாதிகளால் தலை துண்டித்த கொல்லப்பட்ட ஜப்பானிய பத்திரிகையாளர் கெஞ்சி கட்டோவை, ‘பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம்’ என்று, அந்நாட்டு அதிகாரிகள் மூன்று முறை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அதை பொருட்படுத்தாத அவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்பதாக வீடியோ பதிவை செய்து வைத்து விட்டு, பயங்கரவாதிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு சென்றிருப்பது, பின்னர் தெரியவந்தது.
‘தனி நபர் சுதந்திரத்தை மீறுவதாக இருந்தாலும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அரசின் நடவடிக்கை, மிகச்சரியானது’ என்பதே, அந்நாட்டினரின் கருத்தாக இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக