கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

சனி, 16 ஜனவரி, 2016

வந்தது பார் ஆட்சி மாற்றம்!

உள்ளூரில் ஆட்சி மாற்றம் வருமா, வராதா என்று, எல்லோரும் ஏகத்துக்கும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், உலக அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆட்சி மாற்றம், ஏற்பட்டிருக்கிறது.
அது, தைவானில் நடந்த ஆட்சி மாற்றம். எட்டாண்டுகளாக ஆட்சியில் இருந்த தேசியவாத கோமிண்டாங் கட்சியினர், அதிகாரத்தை இழந்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, அக்கட்சியின் வேட்பாளர் எரிக் சூ, தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர், (டி.பி.பி.,) ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். முதல் முறையாக, பெண் ஒருவர், 59 வயது சை இங்-வென் அதிபராக பதவியேற்க உள்ளார்.
சீனாவில், கம்யூனிஸ்டுகளுடன் நடந்த உள்நாட்டுப் போர் முடிவில் தோல்வியுற்ற தேசியவாத கோமிண்டாங் கட்சியினர், 1949ல் பார்மோசா தீவில் (இப்போதைய பெயர்தான் தைவான்), தங்கள் ஆட்சியை நிறுவினர்.
நீண்ட காலம், அவர்களது ஆட்சியே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது.
ஐ.நா., சபையில், சீனாவுக்கான உறுப்பினர் அந்தஸ்தும், வீட்டோ அதிகாரமும் அவர்களிடமே இருந்தன. 1971ல், அந்த அதிகாரம் கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சீனாவுக்கு மாற்றி அளிக்கப்பட்டது.
அப்போது முதல், சர்வதேச அரங்குகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடாகவே தைவான் இருந்து வருகிறது. கம்யூனிஸ்ட் சீனாவின் எதிர்ப்பால், ஐ.நா., சபையில் உறுப்பினராக சேரக்கூட முடியவில்லை. ‘எந்த நாடும், தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று மிரட்டல் விடுவது சீனாவுக்கு வாடிக்கை.
அதற்கு பயந்துகொண்டே, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள், தைவானுடன் நேரடி உறவு வைத்துக் கொள்வதில்லை. உலகின் 21 நாடுகளுடன் மட்டுமே தூதரக உறவு வைத்திருக்கும் தைவான், அமெரிக்க, ஜப்பான், தென் கொரிய ஆதரவுடன், தொழில் வளம் மிக்கதாக மாறியுள்ளது.
‘தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று கூறும் சீனா, ‘தேவைப்பட்டால், ராணுவ நடவடிக்கை மூலமாகக்கூட, தைவானை தங்கள் வசப்படுத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகள் தொடர்பாக, சமீப காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும், ‘மீண்டும் சீனாவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதே, தைவானியர்களில் பெரும்பகுதியினர் கருத்தாக உள்ளது.
ஜனநாயக ஆட்சி முறையில் பழகிப்போன தைவான் மக்கள், சீனாவின் கெடுபிடி கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பவில்லை. இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட தைவானில், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்பட்ட தேர்தலில்தான், ஆளும் தேசியவாத கட்சியினர் தோற்று, எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர்.
தோற்றுப் போன கோமிண்டாங் கட்சியின் தேசியவாதிகள், சீனாவுடன் அனுசரணையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியினரோ, ‘சீனாவுடன் அனுசரித்துப் போக வேண்டியதில்லை. தைவானை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டியதுதான் பாக்கி’ என்ற கொள்கையை கொண்டவர்கள்.
ஆகவே, எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றிருப்பது, நிச்சயம் சீனாவுக்கு நல்ல செய்தியல்ல; புது அதிபரான சை, ‘சீனாவுடனான உறவில், தற்போதைய நிலை அப்படியே தொடரும்’ என்று அறிவித்திருப்பது ஒன்றுதான், சற்று ஆறுதலான செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக