கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

புதன், 6 ஜனவரி, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை!

வடகொரியா, இந்த முறை வெடித்திருப்பது ஹைட்ரஜன் குண்டு. ‘சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்று அறிவித்த அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, மக்கள் ஆடிப்பாடி கொண்டாடுவதுபோன்ற வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பியிருக்கிறது.
சிரியா, ஈரான், ஈராக், சவுதி, ஏமன், பாலஸ்தீனம், உக்ரைன் விவகாரங்களில் மண்டை காய்ந்து கொண்டிருக்கும் மேற்கத்தியர்களுக்கு, கடுப்பைக் கிளப்புவதாக அமைந்திருக்கிறது, இந்த சோதனை.
வழக்கம்போல, கண்டனக் கணைகள் கிளம்பியிருக்கின்றன; ‘கடும் நடவடிக்கை எடுப்போம்’ என மிரட்டலும் விடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஊடகங்கள், சோதனை பற்றிய வழக்கமான சந்தேகத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
வடகொரியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரே ஆதரவான சீனா கூட, இந்த சோதனையை கண்டித்திருக்கிறது. அதைப்பற்றி எல்லாம், அந்நாடு கவலைப்பட்டதாக தெரியவில்லை; கவலைப்படவும் போவதில்லை.
தாத்தா, அப்பா, பேரன் என அடுத்தடுத்து, ஒரே குடும்பத்தின் ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில், பெயருக்குத்தான் கம்யூனிஸ்ட் ஆட்சி; நடப்பதெல்லாம், தனி நபர் ஒருவரின் சர்வாதிகாரம் மட்டுமே.
இப்போது அதிபராக இருக்கும், 32 வயது மட்டுமே நிரம்பிய கிம் ஜங் உன், எப்படிப்பட்டவர், நல்லவரா, கெட்டவரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
இம்மென்றாலும் மரண தண்டனை, ஏன் என்றாலும் மரண தண்டனை என்று, 70 ஆண்டுகளாக பழகிப் போய் விட்டனர், மக்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட கொரியாவுக்கு, பணமும், பொருளும் கொடுத்து ஆதரிப்பார் யாருமில்லை; ‘அரசு சீரழிந்து, அகதிகளாக மக்கள், தங்கள் நாட்டுக்கு வந்து விடக்கூடாதே’ என்பதற்காக, சீனா மட்டும் அவ்வப்போது ஆதரவு வேஷம் கட்டுகிறது.
வறுமையில் வாடும் வட கொரியா, ‘அணு குண்டு ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்பதை உணர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆகவேதான், ஈராக்கின் சதாம் உசேன் மீதும், லிபியாவின் கடாபி மீதும் கை வைத்த மேற்கத்தியர்கள், வட கொரியா மீது கை வைக்க அஞ்சுகின்றனர்.
அந்நாட்டுக்கு மிக அருகே இருக்கும் ஜப்பானிலும், தென் கொரியாவிலும் அமெரிக்க படைத்தளங்கள் இருக்கின்றன; அவற்றில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இருக்கின்றனர். ஆகவே, பைத்தியக்காரன் கையில் அணு குண்டு இருப்பதன் அசவுகர்யத்தை, உணர்ந்திருப்பதால்தான், வெற்று மிரட்டல்களோடு வேடிக்கை பார்க்கிறது, அமெரிக்கா. வடகொரியாவை பொறுத்தவரை, இழப்பதற்கு எதுவுமில்லை. ஆபத்து என்று வந்து விட்டால், இருக்கவே இருக்கிறது அணு குண்டு.
அந்நாடு வைத்திருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை, அமெரிக்கா வரை நீண்டு விட்டதாக, தகவல்கள் பீதி கிளப்புகின்றன. ஏற்கனவே கடுமையான பொருளாதார தடைகளுக்கு ஆட்பட்டிருக்கும் வட கொரியாவை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல், அமெரிக்காவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
ஐ.நா., பொதுச் செயலாளரான, தென் கொரியர் பான் கீ மூனுக்கு, பாவம் தர்ம சங்கடம். 70 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும் கொரியர்களின் மோதல், மனித குலத்தின் ராஜதந்திர செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக