கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

சனி, 16 மே, 2015

சீனர்களுக்கு புரியும் மொழி!

 பிரதமர் மோடியின் மூன்று நாள் சீன சுற்றுப்பயணம், சுமுகமாக நடந்தேறியிருக்கிறது. அந்நாட்டு அதிபர், பிரதமர், கட்சியினர், தொழில் துறையினர் என எல்லோரையும் சந்தித்து விட்டார். 24 ஒப்பந்தங்களும்,  கையெழுத்தாகி இருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியவை என்றெல்லாம், அவற்றில் எதுவும் இல்லை. சுருங்கச்சொன்னால், உப்புச் சப்பற்ற வெற்றுக் காகிதங்கள்.
இந்த ஒப்பந்தங்களாலும், பேச்சுவார்த்தையாலும், இரு நாடுகளுக்கும் எல்லைப்பிரச்னை தீரப்போவதில்லை; இந்தியா, விட்டுக்கொடுத்தால் ஒழிய, சீனர்கள் சமாதானம் அடையப்போவதும் இல்லை.
காரணங்கள் நிறைய இருக்கின்றன. பாரம்பரியமும், வரலாறும் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு இணையானது இந்தியா என்பதை, சீனர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை.
‘திபெத் விவகாரம், இந்தியாவால் தூண்டி விடப்பட்டது; தூண்டி விடப்படுகிறது’ என்பது அவர்கள் எண்ணம். ஆகவே, சீனர்கள், இந்தியாவை நம்புவதில்லை; அதனால் என்ன? இந்தியாவும்தான் சீனாவை நம்புவதில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், சீனா நேரடியாகவே ஈடுபடுகிறது. காந்தியின் தேசம் அப்படிச் செய்ய முடியுமா? ஆகவே, கைகட்டி, வாய் பொத்தி, நடப்பதை வேடிக்கை பார்க்கிறது.
வடகிழக்கு எல்லையில் இருக்கும் பிரிவினைவாதக் குழுவினருக்கு, ஆயுதங்கள் அனைத்தும் சீனாவில் இருந்தே கிடைக்கின்றன. ‘உல்பா’ பிரிவினைக்குழுவின் முக்கியத்தளபதி, சீனாவில் இருந்தே செயல்படுகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியை தன் வசம் வைத்திருக்கும் சீனா, மற்றொரு பகுதியில், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, இப்போது பாதை அமைக்கிறது; நமது வெளியுறவுத்துறை செயலாளர்களும், செய்தித் தொடர்பாளர்களும், பேஸ்புக், ட்விட்டர் எதிர்ப்பைத்தாண்டி வெறென்ன செய்து விட முடியும்?
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி வழியாக சீனா அமைக்கும் நெடுஞ்சாலைப்பணி முடிந்து விட்டால், அந்நாட்டின் உட்பகுதிகளுக்கும், அரபிக்கடல் துறைமுகங்களுக்கும் நேரடித்தொடர்பு ஏற்பட்டு விடும். அதற்கு வசதியாகவே, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை கேட்டு வாங்கி, மேம்படுத்தி வருகிறது சீனா.
பிரம்மபுத்ரா நதி நீர் முழுமையும் உரிமை கொண்டாடும் சீனா, அதை தன் நாட்டின் உட்பகுதிகளுக்கு திசை திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அவ்வப்போது, அந்நாடு வெளியிடும் வரைபடங்களில், இந்தியப்பகுதிகள் பலவும், சீனாவின் அங்கங்களாக சித்தரிக்கப்படுகின்றன.
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ராணுவத்தினரை அனுப்பி, தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சீனா, நேபாளம், பூடான், வங்கதேசம், பர்மா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில், இந்திய எதிர்ப்பை கிளறி விடுகிறது.
இந்த விஷமங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் நிலையில், அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் எதுவும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. சப்பாணியான முந்தைய காங்கிரஸ் அரசு தான் ஜவ்வாக இழுத்தது என்றால், பலசாலி என்று பீற்றிக்கொள்கிற இந்த அரசும், ஏனோதானோ என்றே இருக்கிறது.
சீனாவுக்கு தலைவலியை உண்டாக்குகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தைவான். அதை இன்னும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. அதாவது, தூதரக உறவே கிடையாது. சீனா கோபித்துக்கொள்ளும் என்பதே, நேரு காலம் முதலாக, இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.
அடுத்தது, தென் சீனக்கடல் எல்லை விவகாரம். இந்தக்கடல் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்பட்டது என்கிறது, சீனா. அதை, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே, தைவான் நாடுகள்  ஏற்பதில்லை. அவ்வப்போது மோதலும் நடக்கிறது.
வியட்நாம் நாட்டுக்காக தென் சீனக்கடலில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபடும் என்று அறிந்தவுடன், அதை சீனா ஆட்சேபித்தது; இன்னும் ஆட்சேபித்துக் கொண்டிருக்கிறது. இப்போது, நம்மவர்கள் ஜகா வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திபெத் விவகாரம் சர்வதேச அளவில் பிரபலமானது. அதை பயன்படுத்தியே, சீனாவுக்கு அதிகபட்ச பயம் காட்ட முடியும். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதைத்தான் செய்கின்றன. சீனா&ஜப்பான் உறவும் சுமூகமாக இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஆரம்பமான மோதல் அது; கடல் எல்லை விவகாரம், தீவுகளை சொந்தம் கொண்டாடுவது என இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சீனாவின் உட்பகுதியில், தனி நாடு கோரிக்கைகள் இருக்கின்றன. கோரிக்கைக்காக, பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் குழுக்கள் இருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு, தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவோரும் உண்டு.
இப்படி பலப்பல பிரச்னைகளை கொண்டிருக்கும் சீனா, சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இந்தியர்களுக்கு இடையூறு செய்து கொண்டே இருக்கிறது. எங்கோ இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் சீனா, தன் பண பலத்தை காட்டுவதால், நமக்கெந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இங்கே இருக்கும் இலங்கையிலும், மாலத்தீவிலும் கொட்டப்படும் சீனத்துப்பணம், நிச்சயமாக இந்தியாவுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எல்லாம் அறிந்திருந்தும், இந்தியத்தலைவர்கள், சீனர்களுக்கு அடங்கிப்போவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாட்டுத்தலைவர்களுக்கு இருக்கும் நெஞ்சுரம் நம்மவர்களுக்கும் வர வேண்டும். மிரட்டி மீன் பிடிக்க நினைக்கும் சீனர்களுக்கு, அவர்களது பலவீனங்களை பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
‘இந்தோ சீனி பாய் பாய்’ என்று கூடிக்குலாவியதெல்லாம், நேரு இருக்கும்போதே முடிவுக்கு வந்து விட்டது. பற்பசை விளம்பரம்போல் சிரித்துக்கொண்டு பேசுவதும், கேமராவுக்கு ‘செல்பி’ போஸ் கொடுத்துக் கொண்டே பேசுவதும், சீனாவை பொறுத்தவரை, சற்றும் பயனற்றவை. ‘நீ என்னைக் கால் வாரினால், நானும் கால் வாரி விடத் தயங்க மாட்டேன்’ என்பதே, சீனர்களுக்கு புரியும் மொழி. நம்மவர்கள் உணர்ந்தால், சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக