கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

சனி, 23 ஜனவரி, 2016

குரங்குகள் கையில் பூமாலை!

மாலத்தீவில், ஜனநாயகம் குப்பைக்கூடைக்குப் போய், மூன்றாண்டுகள்  கடந்து விட்டன. ஒரே நம்பிக்கையான, முன்னாள் அதிபர் நஷீத்,  இப்போதுதான் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து, ஜாமினில் வ ந்திருக்கிறார்; அதுவும், முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக.
வக்கீல் அமல் குளூனியின் பிரபலமும், அவரது அமெரிக்க, ஐரோப்பிய  தொடர்புகளும், நஷீத்துக்கு இந்த ஜாமினை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
நஷீத், ஜனநாயக அடிப்படையில், மக்களால் தேர்வு செய்யப்பட்டு  ஆட்சிக்கு வந்தவர். இந்திய ஆதரவாளரான அவரது ஆட்சி, துப்பாக்கி  முனையில் கவிழ்க்கப்பட்டது.
அரசு சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு  13 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்த தண்டனையில் இருந்துதான், நஷீத்துக்கு ஒரு மாதம் இடைக்கால ஜாமின் கிடைத்திருக்கிறது.
மாலத்தீவில் இப்போது, அப்துல்லா யாமீன்  தலைமையில் நடப்பது, இந்திய விரோத, சர்வாதிகார ஆட்சி. முப்பது ஆண்டுக்கும் மேலாக அதிபராக இருந்த கயூம் பின்னணியில் இருக்கும் தற்போதைய ஆட்சியில், ஜனநாயகம் என்பது பெயரளவுக்குக்கூட கிடையாது.
மாலத்தீவில் ஜனநாயகம் சீரழிக்கப்படுவதையும், அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்கப்படுவதையும் சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன.
சிரியா, ஈராக், லிபியாவைப் போல், எண்ணெய் வளமோ, பிராந்திய முக்கியத்துவமோ  இல்லாத மாலத்தீவில், ஜனநாயகம் இருந்தாலென்ன, சர்வாதிகாரம்  இருந்தாலென்ன என்பதே, மேற்கத்தியர்களின் நிலை.
ஐ.நா.,வும், ஐரோப்பிய யூனியனும், காமன்வெல்த் கூட்டமைப்பும், அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகளைப் பற்றி, மாலத்தீவு ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதேயில்லை. சர்வதேச அரங்குகளில் தங்களுக்காக வாதாட, அவர்களும் ஒரு பிரபல வக்கீல் வைத்திருக்கின்றனர்.  அவர், முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேரின் மனைவி  செர்ரி பிளேர்.
மொத்தம், 1192 தீவுகளை கொண்ட மாலத்தீவு, சன்னி இஸ்லாமியர்கள்  பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டீஷ்காரர்கள் என மூன்று வெவ்வேறு நாடுகளின் காலனி ஆட்சியில் இருந்த தீவுக்கூட்டம், 1965ல் தனி நாடாக சுதந்திரம்  பெற்றது.
சுற்றுலாவும், மீன்பிடித்தலும் பிரதான தொழில்கள். உலகின் மிக தாழ்வான நாடு என்பதால், சற்றே கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும்,  மூழ்கி விடும் அபாயம் உண்டு. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் செய்த  எண்ணற்ற குழப்பங்களில், மாலத்தீவுகளை தனி நாடாக அறிவித்ததும்  ஒன்று.
‘சிகிச்சைக்காக, ஜாமினில் லண்டன் சென்றுள்ள நஷீத், திரும்பி வருவார் என்பது நிச்சயமில்லை’ என்பதே மாலத்தீவு ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
எனவேதான் ‘குடும்பத்தில் ஒருவர், பிணைக்கைதியாக இருந்தால்தான்,  நஷீத்தை விடுதலை செய்வோம்’ என்று, உலகின் வேறெந்த நாகரிக  கலாசாரம் கொண்ட நாட்டிலும் இல்லாத வகையில், நிபந்தனை  விதித்தனர்.
அதை ஏற்றுக்கொண்டு, சகோதரர் ஒருவர், பிணைக்கைதியாக மாலத்தீவில் இருப்பதற்கு உத்தரவாதம் தெரிவித்தபிறகே, நஷீத்தை அரசு ஜாமினில் விடுவித்துள்ளது; அதுவும், 30 நாட்களுக்குள்  நாடு திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
லண்டன் சென்றிருக்கும் நஷீத், தன் வக்கீல் உதவியுடன், பிரிட்டன்  பிரதமர் கேமரூனை சந்தித்து உதவி கோரியிருக்கிறார். ‘இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புகிறது’ என்று கேமரூன் மனதுக்குள்  எண்ணியிருக்கக்கூடும்.
உலக நாடுகளை விட்டுத்தள்ளுங்கள்! அண்டை நாடான இந்தியாவால்  என்ன செய்ய முடிந்தது? அவ்வப்போது, மாலத்தீவின் ஆட்சியாளர்களிடம் மூக்குடைபடுவது, டில்லிவாலாக்களுக்கு வாடிக்கையாகி இருக்கிறது.
இந்திய விரோத, சீன ஆதரவு, மத அடிப்படைவாத சக்திகள், மாலத்தீவில் வேரூன்றி விட்டதை, டில்லிவாலாக்கள் புரிந்து கொண்டிருப்பதால்தான், ‘இருக்கும் மரியாதை தொடர்ந்தால்போதும்’ என்பதாக, அமைதி காக்கின்றனர்.
மாலை போன்ற வடிவில் அமைந்த தீவுக்கூட்டம் என்பதால், மாலைத்தீவுகள் என்ற பெயர், பழந்தமிழர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அப்பெயரே, காலப்போக்கில் மருவி, மாலத்தீவுகளாக மாறியிருக்கிறது. அந்நாட்டின் இப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தால், ‘பூமாலை, குரங்குகளிடம் சிக்கியிருக்கிறது என்று வர்ணிப்பதே, மிகப் பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக