கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

வியாழன், 5 மார்ச், 2015

மாயம் ஆகாயம்!


அறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலத்திலும், யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத மர்மம் ஒன்று உண்டெனில், அது மலேசிய விமானம் மாயமான விவகாரமாகத்தான் இருக்க முடியும். ஓராண்டு கடந்து விட்டது. விமானம் எங்கே போனது, என்ன ஆனது, பயணிகள் கதி என்ன என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தபாடில்லை.
வீதிகளில் நடப்பவை, வீட்டுக்குள் இருப்பவை எல்லாம் கண்டறிந்து சொல்லும் செயற்கைக்கோள்கள் பயனற்றவை ஆகி விட்டன. கப்பல்கள், மின்னணு சமிக்ஞை கண்டறியும் கருவிகள், விமானங்கள், நீர்மூழ்கிகள், கடல் ஆழம் சென்று தேடும் நீச்சல் வீரர்கள் இருந்தும், காணாமல் போனது, இன்னும் போனதாகவே இருக்கிறது. இந்தியப்பெருங்கடலில் சல்லடை போட்டுத் தேடியாகி விட்டது. வங்கக்கடல் வரையிலும் வந்து பார்த்தாகி விட்டது.
நம்மூரில், ஆளோ, பொருளோ காணாமல் போனால், வெற்றிலையில் மை போட்டுப்பார்ப்பது வழக்கம். மை போட்டுப்பார்க்கும் மந்திரவாதி, ‘வடக்க, கெழக்க போயிருக்குது, இன்னும் ஒரு மாசத்துல தானே திரும்பி வரும்’ என்று குத்து மதிப்பாகச் சொல்லி வைப்பார். அப்படிச் சில, மலேசிய மந்திரவாதிகளும்கூட முயற்சித்துப் பார்த்து விட்டார்கள்; மாயமான விமானம் வந்தபாடில்லை.
விமானத்தில், பயணிகள், ஊழியர்கள் என 239 பேர் பயணித்தனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள். மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி மகன், அவரது சீனத்து மனைவி,  சென்னை
யை சேர்ந்த தொண்டு நிறுவன அதிகாரி சந்திரிகா எனச்சிலர் பற்றித்தான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. மற்ற பயணிகளில், பெரும்பகுதியினர் சீனர்கள்.
மாயமான விமானம், என்ன ஆகியிருக்கும் என்று பல விதமான கற்பனைகள். வேற்று கிரகவாசிகள் இழுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்று பலருக்கும் சந்தேகம் இன்னமும் இருக்கிறது. இந்தியப்பெருங்கடலின் கட்டக்கடைசியில், அமெரிக்க ராணுவ தளம் இருக்கும் டியாகோ கர்சியோ தீவில் தரை இறங்கியிருக்கலாம் என்று கூட, யூகங்கள் வெளியாகின. சந்துகளில் சிந்துபாடுவதை வழக்கமாக கொண்ட பிரபல டுபாக்கூர் சாமி, ‘மாயமான விமானம், பாகிஸ்தானில் பதுக்கப்பட்டிருப்பதை, போயிங் நிறுவன ‘சோர்ஸ்’ சொல்லிவிட்டது’ என்றொரு புளுகுமூட்டையை கூசாமல் அவிழ்த்து விட்டார்.
ஆயிரமாயிரம் கற்பனைகளுக்கு நடுவே, இந்தியப் பெருங்கடலில் ஏதோ பெயரளவுக்கு தேடிக் கொண்டிருக்கிறது, ஆஸ்திரேலிய ராணுவம். எந்தத் தகவலும் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் பயணிகளின் உறவினர்களை நினைத்தால் பாவப்படவே தோன்றுகிறது.
மலேசியாவில் பரவாயில்லை; சீனாவில், மாயமான விமானம் பற்றி தகவல் கேட்கச் செல்லும் உறவினர்களை, சீனத்துப் போலீசார், அடித்து உதைத்தும், மிரட்டியும் அனுப்புகிறார்களாம். பரிதாபப்படுவதை தவிர, நாமென்ன செய்ய முடியும்!

ஞாயிறு, 1 மார்ச், 2015

ராகுல் எங்கே?

ராகுல் காந்தியை காணவில்லை; டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டு, வாரம் ஒன்றாகிவிட்டது. விடை இன்னும் தெரிந்தபாடில்லை. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமாளித்தாக வேண்டுமே!
காங்கிரஸ் பெருந்தலைகள், ‘டிவி’க்காரர்களின் மைக்குகளை கண்டாலே, ‘துண்டைக்காணோம், துணியைக்காணோம்’ என்று ஓடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. முதல் கேள்வியே, ‘ராகுல் எங்கே’ என்று வந்தால், அவர்கள் என்னதான் சொல்வார்கள், பாவம்!
விவகாரம் ‘டிவி’, பத்திரிகைகளில் வெளியில் வந்தவுடன் உஷாரான கட்சித்தலைமை, தலைவர் அனுமதியுடன் (அவங்க அம்மாதான்) ராகுல் விடுப்பில் சென்றிருப்பதாக, பீலாவை அள்ளிவிட்டது. அடேங்கப்பா, எவ்வளவு பெரிய உண்மை!
அவர் விடுப்பில் சென்றாரோ, டில்லி தோல்விக் கடுப்பில் சென்றாரோ, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வராமல், சென்று விட்டதுதான்  வருத்தப்பட வேண்டிய விஷயம். அவருக்கு ஓட்டுப் போட்ட தொகுதி மக்களின் நலன் குறித்து, அவர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டாமா? (ஆமா, பேசீட்டாலும்...!)
விஷயம் ஊரெங்கும் பரவிவிட்டதால், ‘எங்கே ராகுல்’ என்று, இணையத்தில் தேடுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கிலாகி விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்றெண்ணிய வணிக நிறுவனம் ஒன்று, ‘வேர்இஸ்ராகுல்’ என்ற பெயரில், தளத்தை தொடங்கி, இணையத்தில் கடை விரித்துவிட்டது. (என்ன ஒரு வில்லத்தனம்...!)
இருக்கும் குழப்பங்கள் போதாதென்று, டில்லி காங்கிரஸ்காரர் ஒருவர், ராகுல், ஸ்வெட்டர், குல்லாயுடன், டெண்ட் அடித்து உத்தராகண்ட் மாநிலத்து மலைவாசஸ்தலத்தில் தங்கியிருப்பது போன்ற படத்தை, ‘ட்விட்டர்’ பதிவில் ஏற்றி விட்டார். அதையும் மறுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு. பட்ட காலிலேயே படும் என்பது இதுதான் போலிருக்கிறது. (அதெல்லாம், ரொம்பப் பழைய படமாமே)
இந்தப் படங்களால், உத்தராகண்ட் போலீசாருக்கு வந்தது தலைவலி. ‘கடும் பாதுகாப்பில் இருக்க வேண்டிய தலைவர், நம் மாநிலத்தில் எங்கோ தலைமறைவாக இருக்கிறார், ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நடந்து, நாம் மாட்டிக் கொள்ளக்கூடாதே’ என்ற பயத்தில், மலை மலையாக அலைந்து, தேடிக் கொண்டிக்கிருக்கிறார்களாம். அந்த ஊர் காங்கிரஸ்காரர்களால், டில்லி தலைமைக்கு வந்தது இன்னொரு பிரச்னை. ‘எங்களுக்குக்கூட சொல்லாமல், எப்படி எங்க மாநிலத்துக்குள் வரலாம்’ என்று, போன் மேல் போன் போட்டு, உயிரை எடுக்கிறார்களாம். (வேறு எதற்கு, வரவேற்பு கொடுக்கத்தான்)
இது தவிர, வேலைவெட்டியில்லாத ஆசாமி ஒருவன், ‘ராகுல் காந்தியை காணவில்லை, எங்கே போனார் என்று கண்டுபிடிக்க வேண்டும்’ என்று, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து விட்டான். கெஜ்ரிவால் வாங்கியதுபோக, மிச்சம் மீதி மானத்தை, இந்தாள் வாங்கிவிடுவான் போலிருக்கிறது.
அப்படியும் தீர்ந்ததா பிரச்னை? அதுதான் இல்லை. ‘ராகுல் காந்தியை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு நிச்சயம்’ என்று, உ.பி., மாநிலத்தில் ஒரு குரூப் ஆங்காங்கே போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டது.
இப்படி களேபரம் நடப்பதெல்லாம் ராகுலுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஓசியில் கிடைக்கும் விளம்பரத்தை இழப்பதற்கு, யாருக்குத்தான் மனது வரும்? ‘அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்!

‘வட துருவமும், தென் துருவமும் இணைந்திருக்கின்றன’ என்பது, மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றி விட்ட முப்தியின் கருத்து. அதிலொன்றும் மிகையில்லை.
புலியுடன் ஆடுகள் உறவாடுவதும், பூனைகள் எலியுடன் விளையாடுவதும், காண்பதற்கு அரிய காட்சிகளே. ஆகவே, இன்றைய ஜம்மு பதவியேற்பு விழாவில், கட்டித்தழுவிக் கொள்ளும் காட்சிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையென வர்ணிக்கப்படுவது சரியே.
எதிரெதிர் நிலைப்பாடுகளை கொண்ட கட்சிகள், கூட்டுச் சேர்ந்து அரசமைப்பது, இந்திய அரசியலுக்கு புதிதல்ல. ஆனால், ஜம்மு காஷ்மீர் குறித்து, பா.ஜ., இவ்வளவுகாலம் பேசிவந்ததை கொஞ்சமேனும் அறிந்திருப்பவர்களுக்குக்கூட, இந்தக்கூட்டணியின் முரண்பாடுகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முப்தியும், அவரருமை மகளும், கலகக்கும்பலுக்கு தலைமை வகிப்பவர்கள். அவர்களது வெற்றியில், பிரிவினைவாதிகளின் பங்களிப்பு அதிகம் என்பதுவும் வெளிப்படை.
வி.பி.சிங் ஆட்சியில், உள்துறை அமைச்சராக இருந்த முப்தியின் மூன்றாவது மகளை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட, அவரை மீட்க, சிறையில் இருந்த பயங்கரவாதிகள் ஐந்து பேரை, மத்திய அரசு விடுவித்தது. அதுவும், மாநில அரசின் கடும் எதிர்ப்பை மீறி.
பின்னாளில், அதே பயங்கரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்திக்காட்டியது, முப்தியின் வரலாறு.
இத்தகைய நன்றி கெட்ட நல்லவருடன்தான், இன்று, பா.ஜ., கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறது. உரிய சந்தர்ப்பம் வரும்போது, பா.ஜ.,வை ஓரங்கட்டிவிட்டு, நாம் தனித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது முப்தியின் திட்டமாக இருக்கும். பா.ஜ.,வுக்கும் நிச்சயம் அதுபோன்ற எண்ணங்கள் இருக்கும். ‘சந்தர்ப்பவாதக் கூட்டணி’ என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு, காலாகாலத்துக்கும் உதாரணமாக நிற்கப்போவது இந்தக்கூட்டணிதான்.
பரூக், ஓமர் அப்துல்லாக்கள், இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்; முப்தியும், அவர் மகளும் அப்படியில்லை என்பதை நாடறியும்; நரேந்தர் தாமோதர்தாஸ் மோடியும் அறிவார். அப்படியிருந்தும், இப்படியொரு கூட்டணியை பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஏற்றுக்கொண்டதுதான் பலருக்கும் வியப்பளிக்கிறது.
ஆக, ஆடு புலி ஆட்டம், அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கிறது. புலி யார், எலி யார், பலி யார் என்பதெல்லாம், போகப் போகத்தானே தெரியும்?