கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

சனி, 30 மே, 2015

உதை வாங்கிய ஊழல் ஒழிப்பாளர்கள்!


விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச அரசியலுக்கு இணையாக விவாதிக்கப்படுவது, இதுவொன்றும் முதல் முறையல்ல. சோவியத் யூனியன் நடத்திய ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் புறக்கணித்த வரலாறு ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது. சமீப காலத்தில்கூட, ரஷ்யாவின் சூச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தேர்தலும், பனிப்போரின் நீட்சிகளாக, சர்வதேச செய்திகளாகி இருக்கின்றன. அந்த பட்டியலில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ தேர்தலும், சேர்ந்து கொண்டிருக்கிறது.
‘பிபா’ அமைப்புக்கு நடந்த தேர்தலில், சுவிட்சர்லாந்து நாட்டவரான, 79 வயது செப் பிளாட்டர் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். கூட்டமைப்பின் மொத்தமுள்ள 209 நாட்டு கால்பந்து சங்கங்களில், 133 நாட்டு கால்பந்து சங்கங்கள் அவருக்கு ஓட்டளித்திருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடுகளும், ரஷ்யாவும் அவருக்கு ஆதரவாக ஓட்டளித்தன. நிச்சயமாக, இந்திய கால்பந்து சங்கமும் அவருக்குத்தான் ஓட்டளித்திருக்கும்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஜோர்டான் இளவரசர், 39 வயது அலி பின் அல் ஹூசேனுக்கு கிடைத்தவை 73 ஓட்டுகள் மட்டுமே. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவின் ஆதரவு இருந்தும், முதல் சுற்று தேர்தல் முடிவிலேயே, அலி ஹூசேன் தோல்வியை ஒப்புக்கொண்டு, வாபஸ் பெற்று விட்டார்.
கடந்த 17 ஆண்டு காலமாக, ‘பிபா’ கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் பிளாட்டர், இந்த முறையும் அவ்வளாக எதிர்ப்பின்றி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், அமெரிக்கா- ரஷ்யா இடையிலான மோதல், அவருக்கு சனிப்பிடிக்க வைத்து விட்டது. தங்கள் விருப்பத்துக்கு மாறாக, 2018ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோதே, அமெரிக்கர்களுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும். எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிக்காட்டிய அமெரிக்கர்கள், கழுத்தறுத்த பிளாட்டரை ஒழிப்பதற்கு கடைசி ஆயுதமாக, ஊழல் பிரம்மாஸ்திரத்தை ஏவினர்.
அவர்கள் ஏவிய ஆயுதம், ‘பிபா’வை ஒரு கை பார்த்து விட்டது. இரு துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர் ஒருவர் என பெரும்புள்ளிகள், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளாட்டர் மீது தனிப்பட்ட புகார் இல்லையென்றாலும், ‘அவர்தான் ஊழலுக்கு பொறுப்பு. ஆகவே அவர் போட்டியிடக்கூடாது; தேர்தலில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று, அமெரிக்காவும், அடிப்பொடி ஐரோப்பியர்களும் கூக்குரல் எழுப்பினர்.
‘உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டோம்; பிபா அமைப்பில் இருந்து விலகிக்கொள்வோம்’ என்றெல்லாம் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மிரட்டியது. பிரிட்டனும் அப்படியே தெரிவித்தது. பல்லாண்டு காலமாய், ‘பிபா’ ஸ்பான்சர்களாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழல் பற்றி கவலையும், வருத்தமும் தெரிவித்துக் கொண்டே இருந்தன.
‘உக்ரைன் விவகாரத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ரஷ்யாவில் உலகக்கோப்பை போட்டி நடத்த விடக்கூடாது’ என்பதே, அமெரிக்க, ஐரோப்பியர்களின் நோக்கம். ஆனால், பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே! அமெரிக்கர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டு விட்ட பிளாட்டர், ‘வேலையைப் பாருங்கள்’ என்று கூறிவிட்டார். தேர்தலில் நின்று வென்றும் காட்டி விட்டார். உள்நோக்கத்துடன் ஊழல் ஒழிப்பாளர்களாக வேஷமிட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், உதை வாங்கியிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
அமெரிக்கர்களின் நோக்கம் ஊழலை ஒழிப்பது மட்டுமே என்றால், அந்நாட்டவர்களேகூட நம்ப மாட்டார்கள்; ஆகவே அவர்கள் கூறியபடி ஓட்டளிப்பதற்கு பல நாடுகள் தயாராக இல்லை. குறிப்பாக, வறுமையின் பிடியில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுகள். அந்நாட்டு கால்பந்து சங்கங்களுக்கு, ‘பிபா’ அளிக்கும் கால்பந்து மேம்பாட்டு நிதி, உண்மையில் பெருந்தொகை என்றே குறிப்பிட வேண்டும். இந்தியா கூட, இதில் பயன் பெற்றிருக்கிறது. ஆகவே, பயன்பெற்ற பல்வேறு நாடுகளும், பிளாட்டரின் பின்னால் அணிவகுத்திருக்கின்றன.
‘பிளாட்டர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவதை தடுக்கவே, ‘பிபா’ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்’ என்பது, விவகாரத்தில் தொடர்புடைய ரஷ்யாவின் குற்றச்சாட்டு. ‘அமெரிக்காவில் நடக்காத, அமெரிக்கர்களுக்கு தொடர்பில்லாத ஒரு சம்பவத்துக்காக, அமெரிக்கர்கள் வலிய வந்து நடவடிக்கை எடுப்பது புதிராக இருக்கிறது’ என்பது, ரஷ்ய அதிபர் புதின் கருத்து. ‘உலகக்கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போல எரிச்சலில், இங்கிலாந்தும், அமெரிக்காவும், உள்நோக்கத்துடன் புகாரை கிளப்புவதாக’ கூறுகிறார், பிளாட்டர்.
2018ல் உலகக்கோப்பை போட்டி நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்யும் பணி, 2009ல் தொடங்கியது. ஒன்பது நாடுகள் விருப்பம் தெரிவித்தன. துவக்கத்திலேயே மெக்சிகோ விலகிக்கொண்டது. இந்தோனேசியாவின் மனு, அந்நாட்டு அரசு சம்மத கடிதம் வழங்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஒவ்வொன்றாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்ட நிலையில், இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து&பெல்ஜியம் கூட்டணி, ஸ்பெயின்&போர்ச்சுக்கல் கூட்டணி என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிச்சுற்றில் இருந்தனர்.
2010ம் ஆண்டில் இதற்கான தேர்தல் ஜூரிச் நகரில் நடந்தது. இதில் இரண்டாம் சுற்று ஓட்டெடுப்பு முடிவில், ரஷ்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் சுற்றில் ஒன்பது ஓட்டுகள் மட்டுமே பெற்ற ரஷ்யா, இரண்டாம் சுற்றில் 13 ஓட்டுக்களை பெற்றிருந்தது. முதல் சுற்றில் ஏழு ஓட்டுகளை பெற்றிருந்த போர்ச்சுக்கல்&ஸ்பெயின் கூட்டணி, இரண்டாம் சுற்றிலும் அதே ஏழு ஓட்டுகளை பெற்றது.
இப்படி நடத்தப்பட்ட தேர்தலில், உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டுக்களை வாங்கிவிட்டது ரஷ்யா என்பது மறைமுகமான குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில், ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிந்தளவுக்கு இடையூறு செய்யலாம் என்பது, அமெரிக்காவின் திட்டம்.
வல்லரசுகளின் பனிப்போரில் களம் மாறியிருக்கிறது; காட்சிகள் மாறியிருக்கின்றன; நடிகர்களும் மாறியிருக்கின்றனர்; வெல்லப்போவது யார் என்பதை, காலம்தான் சொல்ல வேண்டும்.

சனி, 16 மே, 2015

சீனர்களுக்கு புரியும் மொழி!

 பிரதமர் மோடியின் மூன்று நாள் சீன சுற்றுப்பயணம், சுமுகமாக நடந்தேறியிருக்கிறது. அந்நாட்டு அதிபர், பிரதமர், கட்சியினர், தொழில் துறையினர் என எல்லோரையும் சந்தித்து விட்டார். 24 ஒப்பந்தங்களும்,  கையெழுத்தாகி இருக்கின்றன. வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியவை என்றெல்லாம், அவற்றில் எதுவும் இல்லை. சுருங்கச்சொன்னால், உப்புச் சப்பற்ற வெற்றுக் காகிதங்கள்.
இந்த ஒப்பந்தங்களாலும், பேச்சுவார்த்தையாலும், இரு நாடுகளுக்கும் எல்லைப்பிரச்னை தீரப்போவதில்லை; இந்தியா, விட்டுக்கொடுத்தால் ஒழிய, சீனர்கள் சமாதானம் அடையப்போவதும் இல்லை.
காரணங்கள் நிறைய இருக்கின்றன. பாரம்பரியமும், வரலாறும் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு இணையானது இந்தியா என்பதை, சீனர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை.
‘திபெத் விவகாரம், இந்தியாவால் தூண்டி விடப்பட்டது; தூண்டி விடப்படுகிறது’ என்பது அவர்கள் எண்ணம். ஆகவே, சீனர்கள், இந்தியாவை நம்புவதில்லை; அதனால் என்ன? இந்தியாவும்தான் சீனாவை நம்புவதில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், சீனா நேரடியாகவே ஈடுபடுகிறது. காந்தியின் தேசம் அப்படிச் செய்ய முடியுமா? ஆகவே, கைகட்டி, வாய் பொத்தி, நடப்பதை வேடிக்கை பார்க்கிறது.
வடகிழக்கு எல்லையில் இருக்கும் பிரிவினைவாதக் குழுவினருக்கு, ஆயுதங்கள் அனைத்தும் சீனாவில் இருந்தே கிடைக்கின்றன. ‘உல்பா’ பிரிவினைக்குழுவின் முக்கியத்தளபதி, சீனாவில் இருந்தே செயல்படுகிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியை தன் வசம் வைத்திருக்கும் சீனா, மற்றொரு பகுதியில், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, இப்போது பாதை அமைக்கிறது; நமது வெளியுறவுத்துறை செயலாளர்களும், செய்தித் தொடர்பாளர்களும், பேஸ்புக், ட்விட்டர் எதிர்ப்பைத்தாண்டி வெறென்ன செய்து விட முடியும்?
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதி வழியாக சீனா அமைக்கும் நெடுஞ்சாலைப்பணி முடிந்து விட்டால், அந்நாட்டின் உட்பகுதிகளுக்கும், அரபிக்கடல் துறைமுகங்களுக்கும் நேரடித்தொடர்பு ஏற்பட்டு விடும். அதற்கு வசதியாகவே, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை கேட்டு வாங்கி, மேம்படுத்தி வருகிறது சீனா.
பிரம்மபுத்ரா நதி நீர் முழுமையும் உரிமை கொண்டாடும் சீனா, அதை தன் நாட்டின் உட்பகுதிகளுக்கு திசை திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அவ்வப்போது, அந்நாடு வெளியிடும் வரைபடங்களில், இந்தியப்பகுதிகள் பலவும், சீனாவின் அங்கங்களாக சித்தரிக்கப்படுகின்றன.
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ராணுவத்தினரை அனுப்பி, தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சீனா, நேபாளம், பூடான், வங்கதேசம், பர்மா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில், இந்திய எதிர்ப்பை கிளறி விடுகிறது.
இந்த விஷமங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் நிலையில், அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் எதுவும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. சப்பாணியான முந்தைய காங்கிரஸ் அரசு தான் ஜவ்வாக இழுத்தது என்றால், பலசாலி என்று பீற்றிக்கொள்கிற இந்த அரசும், ஏனோதானோ என்றே இருக்கிறது.
சீனாவுக்கு தலைவலியை உண்டாக்குகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தைவான். அதை இன்னும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. அதாவது, தூதரக உறவே கிடையாது. சீனா கோபித்துக்கொள்ளும் என்பதே, நேரு காலம் முதலாக, இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.
அடுத்தது, தென் சீனக்கடல் எல்லை விவகாரம். இந்தக்கடல் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்பட்டது என்கிறது, சீனா. அதை, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புரூனே, தைவான் நாடுகள்  ஏற்பதில்லை. அவ்வப்போது மோதலும் நடக்கிறது.
வியட்நாம் நாட்டுக்காக தென் சீனக்கடலில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபடும் என்று அறிந்தவுடன், அதை சீனா ஆட்சேபித்தது; இன்னும் ஆட்சேபித்துக் கொண்டிருக்கிறது. இப்போது, நம்மவர்கள் ஜகா வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திபெத் விவகாரம் சர்வதேச அளவில் பிரபலமானது. அதை பயன்படுத்தியே, சீனாவுக்கு அதிகபட்ச பயம் காட்ட முடியும். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதைத்தான் செய்கின்றன. சீனா&ஜப்பான் உறவும் சுமூகமாக இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஆரம்பமான மோதல் அது; கடல் எல்லை விவகாரம், தீவுகளை சொந்தம் கொண்டாடுவது என இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சீனாவின் உட்பகுதியில், தனி நாடு கோரிக்கைகள் இருக்கின்றன. கோரிக்கைக்காக, பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் குழுக்கள் இருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு, தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவோரும் உண்டு.
இப்படி பலப்பல பிரச்னைகளை கொண்டிருக்கும் சீனா, சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இந்தியர்களுக்கு இடையூறு செய்து கொண்டே இருக்கிறது. எங்கோ இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் சீனா, தன் பண பலத்தை காட்டுவதால், நமக்கெந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இங்கே இருக்கும் இலங்கையிலும், மாலத்தீவிலும் கொட்டப்படும் சீனத்துப்பணம், நிச்சயமாக இந்தியாவுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எல்லாம் அறிந்திருந்தும், இந்தியத்தலைவர்கள், சீனர்களுக்கு அடங்கிப்போவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாட்டுத்தலைவர்களுக்கு இருக்கும் நெஞ்சுரம் நம்மவர்களுக்கும் வர வேண்டும். மிரட்டி மீன் பிடிக்க நினைக்கும் சீனர்களுக்கு, அவர்களது பலவீனங்களை பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
‘இந்தோ சீனி பாய் பாய்’ என்று கூடிக்குலாவியதெல்லாம், நேரு இருக்கும்போதே முடிவுக்கு வந்து விட்டது. பற்பசை விளம்பரம்போல் சிரித்துக்கொண்டு பேசுவதும், கேமராவுக்கு ‘செல்பி’ போஸ் கொடுத்துக் கொண்டே பேசுவதும், சீனாவை பொறுத்தவரை, சற்றும் பயனற்றவை. ‘நீ என்னைக் கால் வாரினால், நானும் கால் வாரி விடத் தயங்க மாட்டேன்’ என்பதே, சீனர்களுக்கு புரியும் மொழி. நம்மவர்கள் உணர்ந்தால், சரி!