கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 1 மார்ச், 2015

ராகுல் எங்கே?

ராகுல் காந்தியை காணவில்லை; டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டு, வாரம் ஒன்றாகிவிட்டது. விடை இன்னும் தெரிந்தபாடில்லை. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமாளித்தாக வேண்டுமே!
காங்கிரஸ் பெருந்தலைகள், ‘டிவி’க்காரர்களின் மைக்குகளை கண்டாலே, ‘துண்டைக்காணோம், துணியைக்காணோம்’ என்று ஓடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. முதல் கேள்வியே, ‘ராகுல் எங்கே’ என்று வந்தால், அவர்கள் என்னதான் சொல்வார்கள், பாவம்!
விவகாரம் ‘டிவி’, பத்திரிகைகளில் வெளியில் வந்தவுடன் உஷாரான கட்சித்தலைமை, தலைவர் அனுமதியுடன் (அவங்க அம்மாதான்) ராகுல் விடுப்பில் சென்றிருப்பதாக, பீலாவை அள்ளிவிட்டது. அடேங்கப்பா, எவ்வளவு பெரிய உண்மை!
அவர் விடுப்பில் சென்றாரோ, டில்லி தோல்விக் கடுப்பில் சென்றாரோ, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வராமல், சென்று விட்டதுதான்  வருத்தப்பட வேண்டிய விஷயம். அவருக்கு ஓட்டுப் போட்ட தொகுதி மக்களின் நலன் குறித்து, அவர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டாமா? (ஆமா, பேசீட்டாலும்...!)
விஷயம் ஊரெங்கும் பரவிவிட்டதால், ‘எங்கே ராகுல்’ என்று, இணையத்தில் தேடுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கிலாகி விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்றெண்ணிய வணிக நிறுவனம் ஒன்று, ‘வேர்இஸ்ராகுல்’ என்ற பெயரில், தளத்தை தொடங்கி, இணையத்தில் கடை விரித்துவிட்டது. (என்ன ஒரு வில்லத்தனம்...!)
இருக்கும் குழப்பங்கள் போதாதென்று, டில்லி காங்கிரஸ்காரர் ஒருவர், ராகுல், ஸ்வெட்டர், குல்லாயுடன், டெண்ட் அடித்து உத்தராகண்ட் மாநிலத்து மலைவாசஸ்தலத்தில் தங்கியிருப்பது போன்ற படத்தை, ‘ட்விட்டர்’ பதிவில் ஏற்றி விட்டார். அதையும் மறுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு. பட்ட காலிலேயே படும் என்பது இதுதான் போலிருக்கிறது. (அதெல்லாம், ரொம்பப் பழைய படமாமே)
இந்தப் படங்களால், உத்தராகண்ட் போலீசாருக்கு வந்தது தலைவலி. ‘கடும் பாதுகாப்பில் இருக்க வேண்டிய தலைவர், நம் மாநிலத்தில் எங்கோ தலைமறைவாக இருக்கிறார், ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நடந்து, நாம் மாட்டிக் கொள்ளக்கூடாதே’ என்ற பயத்தில், மலை மலையாக அலைந்து, தேடிக் கொண்டிக்கிருக்கிறார்களாம். அந்த ஊர் காங்கிரஸ்காரர்களால், டில்லி தலைமைக்கு வந்தது இன்னொரு பிரச்னை. ‘எங்களுக்குக்கூட சொல்லாமல், எப்படி எங்க மாநிலத்துக்குள் வரலாம்’ என்று, போன் மேல் போன் போட்டு, உயிரை எடுக்கிறார்களாம். (வேறு எதற்கு, வரவேற்பு கொடுக்கத்தான்)
இது தவிர, வேலைவெட்டியில்லாத ஆசாமி ஒருவன், ‘ராகுல் காந்தியை காணவில்லை, எங்கே போனார் என்று கண்டுபிடிக்க வேண்டும்’ என்று, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து விட்டான். கெஜ்ரிவால் வாங்கியதுபோக, மிச்சம் மீதி மானத்தை, இந்தாள் வாங்கிவிடுவான் போலிருக்கிறது.
அப்படியும் தீர்ந்ததா பிரச்னை? அதுதான் இல்லை. ‘ராகுல் காந்தியை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு நிச்சயம்’ என்று, உ.பி., மாநிலத்தில் ஒரு குரூப் ஆங்காங்கே போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டது.
இப்படி களேபரம் நடப்பதெல்லாம் ராகுலுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஓசியில் கிடைக்கும் விளம்பரத்தை இழப்பதற்கு, யாருக்குத்தான் மனது வரும்? ‘அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக