கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 1 மார்ச், 2015

ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்!

‘வட துருவமும், தென் துருவமும் இணைந்திருக்கின்றன’ என்பது, மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றி விட்ட முப்தியின் கருத்து. அதிலொன்றும் மிகையில்லை.
புலியுடன் ஆடுகள் உறவாடுவதும், பூனைகள் எலியுடன் விளையாடுவதும், காண்பதற்கு அரிய காட்சிகளே. ஆகவே, இன்றைய ஜம்மு பதவியேற்பு விழாவில், கட்டித்தழுவிக் கொள்ளும் காட்சிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையென வர்ணிக்கப்படுவது சரியே.
எதிரெதிர் நிலைப்பாடுகளை கொண்ட கட்சிகள், கூட்டுச் சேர்ந்து அரசமைப்பது, இந்திய அரசியலுக்கு புதிதல்ல. ஆனால், ஜம்மு காஷ்மீர் குறித்து, பா.ஜ., இவ்வளவுகாலம் பேசிவந்ததை கொஞ்சமேனும் அறிந்திருப்பவர்களுக்குக்கூட, இந்தக்கூட்டணியின் முரண்பாடுகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முப்தியும், அவரருமை மகளும், கலகக்கும்பலுக்கு தலைமை வகிப்பவர்கள். அவர்களது வெற்றியில், பிரிவினைவாதிகளின் பங்களிப்பு அதிகம் என்பதுவும் வெளிப்படை.
வி.பி.சிங் ஆட்சியில், உள்துறை அமைச்சராக இருந்த முப்தியின் மூன்றாவது மகளை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட, அவரை மீட்க, சிறையில் இருந்த பயங்கரவாதிகள் ஐந்து பேரை, மத்திய அரசு விடுவித்தது. அதுவும், மாநில அரசின் கடும் எதிர்ப்பை மீறி.
பின்னாளில், அதே பயங்கரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்திக்காட்டியது, முப்தியின் வரலாறு.
இத்தகைய நன்றி கெட்ட நல்லவருடன்தான், இன்று, பா.ஜ., கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறது. உரிய சந்தர்ப்பம் வரும்போது, பா.ஜ.,வை ஓரங்கட்டிவிட்டு, நாம் தனித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பது முப்தியின் திட்டமாக இருக்கும். பா.ஜ.,வுக்கும் நிச்சயம் அதுபோன்ற எண்ணங்கள் இருக்கும். ‘சந்தர்ப்பவாதக் கூட்டணி’ என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கு, காலாகாலத்துக்கும் உதாரணமாக நிற்கப்போவது இந்தக்கூட்டணிதான்.
பரூக், ஓமர் அப்துல்லாக்கள், இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்; முப்தியும், அவர் மகளும் அப்படியில்லை என்பதை நாடறியும்; நரேந்தர் தாமோதர்தாஸ் மோடியும் அறிவார். அப்படியிருந்தும், இப்படியொரு கூட்டணியை பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஏற்றுக்கொண்டதுதான் பலருக்கும் வியப்பளிக்கிறது.
ஆக, ஆடு புலி ஆட்டம், அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கிறது. புலி யார், எலி யார், பலி யார் என்பதெல்லாம், போகப் போகத்தானே தெரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக