கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

புதன், 6 ஜனவரி, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை!

வடகொரியா, இந்த முறை வெடித்திருப்பது ஹைட்ரஜன் குண்டு. ‘சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்று அறிவித்த அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, மக்கள் ஆடிப்பாடி கொண்டாடுவதுபோன்ற வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பியிருக்கிறது.
சிரியா, ஈரான், ஈராக், சவுதி, ஏமன், பாலஸ்தீனம், உக்ரைன் விவகாரங்களில் மண்டை காய்ந்து கொண்டிருக்கும் மேற்கத்தியர்களுக்கு, கடுப்பைக் கிளப்புவதாக அமைந்திருக்கிறது, இந்த சோதனை.
வழக்கம்போல, கண்டனக் கணைகள் கிளம்பியிருக்கின்றன; ‘கடும் நடவடிக்கை எடுப்போம்’ என மிரட்டலும் விடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஊடகங்கள், சோதனை பற்றிய வழக்கமான சந்தேகத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
வடகொரியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரே ஆதரவான சீனா கூட, இந்த சோதனையை கண்டித்திருக்கிறது. அதைப்பற்றி எல்லாம், அந்நாடு கவலைப்பட்டதாக தெரியவில்லை; கவலைப்படவும் போவதில்லை.
தாத்தா, அப்பா, பேரன் என அடுத்தடுத்து, ஒரே குடும்பத்தின் ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில், பெயருக்குத்தான் கம்யூனிஸ்ட் ஆட்சி; நடப்பதெல்லாம், தனி நபர் ஒருவரின் சர்வாதிகாரம் மட்டுமே.
இப்போது அதிபராக இருக்கும், 32 வயது மட்டுமே நிரம்பிய கிம் ஜங் உன், எப்படிப்பட்டவர், நல்லவரா, கெட்டவரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
இம்மென்றாலும் மரண தண்டனை, ஏன் என்றாலும் மரண தண்டனை என்று, 70 ஆண்டுகளாக பழகிப் போய் விட்டனர், மக்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட கொரியாவுக்கு, பணமும், பொருளும் கொடுத்து ஆதரிப்பார் யாருமில்லை; ‘அரசு சீரழிந்து, அகதிகளாக மக்கள், தங்கள் நாட்டுக்கு வந்து விடக்கூடாதே’ என்பதற்காக, சீனா மட்டும் அவ்வப்போது ஆதரவு வேஷம் கட்டுகிறது.
வறுமையில் வாடும் வட கொரியா, ‘அணு குண்டு ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்பதை உணர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆகவேதான், ஈராக்கின் சதாம் உசேன் மீதும், லிபியாவின் கடாபி மீதும் கை வைத்த மேற்கத்தியர்கள், வட கொரியா மீது கை வைக்க அஞ்சுகின்றனர்.
அந்நாட்டுக்கு மிக அருகே இருக்கும் ஜப்பானிலும், தென் கொரியாவிலும் அமெரிக்க படைத்தளங்கள் இருக்கின்றன; அவற்றில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இருக்கின்றனர். ஆகவே, பைத்தியக்காரன் கையில் அணு குண்டு இருப்பதன் அசவுகர்யத்தை, உணர்ந்திருப்பதால்தான், வெற்று மிரட்டல்களோடு வேடிக்கை பார்க்கிறது, அமெரிக்கா. வடகொரியாவை பொறுத்தவரை, இழப்பதற்கு எதுவுமில்லை. ஆபத்து என்று வந்து விட்டால், இருக்கவே இருக்கிறது அணு குண்டு.
அந்நாடு வைத்திருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை, அமெரிக்கா வரை நீண்டு விட்டதாக, தகவல்கள் பீதி கிளப்புகின்றன. ஏற்கனவே கடுமையான பொருளாதார தடைகளுக்கு ஆட்பட்டிருக்கும் வட கொரியாவை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல், அமெரிக்காவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
ஐ.நா., பொதுச் செயலாளரான, தென் கொரியர் பான் கீ மூனுக்கு, பாவம் தர்ம சங்கடம். 70 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும் கொரியர்களின் மோதல், மனித குலத்தின் ராஜதந்திர செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சீரழிந்த நம்பிக்கை!

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையுடன் பதவிக்கு வந்தவர் ஒபாமா. ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல; உலக மக்களில் கணிசமான பகுதியினருக்கு, அவர் மீது நல்லெண்ணமும், ஏதோ ஒரு இனம்புரியாத நம்பிக்கையும் இருந்தன.
ஆனால், அவர்கள் எல்லோரையும் ஒபாமா கைவிட்டு விட்டார் என்பதே, இப்போது உலகளாவிய கருத்தாக இருக்கிறது. சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், ஒபாமாவின் பல நிலைப்பாடுகள் கேலிக்குரியதாக மாறியிருக்கின்றன.
‘தங்களுக்கெல்லாம் ஏதாவது நல்லது நடக்கும்’ என்று எதிர்பார்த்த அமெரிக்க கருப்பினத்தவர், ‘ஒபாமாவின் ஏழாண்டு ஆட்சியில், தாங்கள் அடைந்தது எதுவுமில்லை’ என்றே கருதுகின்றனர். கருப்பின இளைஞர்களும், பெண்களும் வெள்ளையின போலீசாரால் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்ட சம்பவங்கள், அமெரிக்காவில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெர்குஸன் நகரில் அப்படிப்பட்ட சம்பவம் நடந்தபோது, ஒபாமா விடுமுறையில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.
பொருளாதாரத்திலும், ராணுவ ரீதியாகவும், பலம் வாய்ந்த தங்கள் நாடு, ஒபாமாவின் செயல் திறனற்ற ஆட்சியால், தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதாக, அமெரிக்கர்களின் மதிப்பீடு இருக்கிறது.
அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட சர்வதேச அரசியல் முடிவுகளில், கம்யூனிச நாடான கியூபாவுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், ஈரானுடன் பேச்சு நடத்தி, பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதும் முக்கியமானவை.
அறுபது ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார தடைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த கியூபாவுடன் மீண்டும் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு, பெரிய அளவில் எதிர்ப்பில்லை. ஆனால், ஈரான் விவகாரம் அப்படியல்ல; முக்கிய எதிர்க்கட்சியான, குடியரசு கட்சியினரின் கடும் எதிர்ப்பையும், தோழமை நாடான இஸ்ரேலின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஈரானுடன் பேச்சைத் தொடங்கினார் ஒபாமா.
‘பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனில், அணு ஆயுதம் தயார் செய்யக்கூடாது’ என்பதே, அமெரிக்க தரப்பு வாதம். இதை ஏற்றுக் கொண்ட ஈரான், ‘அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று உறுதி கூறி, பொருளாதார தடையில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சிக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு, உள்ளூரிலும், உலக அளவிலும், கடும் எதிர்ப்பு இருக்கவே செய்தது.
இருந்தாலும், தன் நிலையில் ஒபாமா உறுதியாக இருந்தார். எறும்பு ஊர கல்லும் தேய்ந்தாற்போல, இப்போது அவரது முடிவு மாறும் போலிருக்கிறது. ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்க முடிவெடுக்கப்பட்டால், அது ஒரு வகையில், ஒபாமாவின் ‘அந்தர் பல்டி’ என்றே சொல்ல வேண்டும்.
மற்றபடி, லிபியா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டை சீர்குலைத்தது, ஈராக்கின் ஒரு பகுதியை பயங்கரவாதிகள் கைப்பற்றியும், கண்டுகொள்ளாமல் இருந்தது, ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை அவசரம் அவசரமாக திரும்பப்பெற்று இப்போது விழி பிதுங்கியிருப்பது, சிரியா பிரச்னையில் மூக்கை நுழைத்து குழப்பம் விளைவிப்பது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து, ஐரோப்பிய நாடுகளையும் விடாப்பிடியாக நிர்ப்பந்தம் செய்வது என அடுத்தடுத்து பல குளறுபடிகளுக்கு அமெரிக்கா காரணமாக இருந்தது, ஒபாமாவின் பதவிக்காலத்தில்தான்.
தனி நாடாக உருவான காலம் முதல், எந்த ஒரு அமெரிக்க அரசுடனும், இஸ்ரேல் அரசு இந்த அளவு உரசிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. அந்தளவுக்கு, ஒபாமா அரசு மீது, இஸ்ரேலியர்களுக்கு வெறுப்பு உண்டாகி விட்டது.
ஒரு ராணுவ அமைச்சர், திடுதிப்பென்று பதவியில் இருந்து விரட்டியடிக்கப்படுவதெல்லாம், சர்வாதிகார நாடுகளில் மட்டுமே சாத்தியம். அதையும் நிகழ்த்திக் காட்டி விட்டார் ஒபாமா. அகதிகள் பிரச்னையால், ஐரோப்பிய நாடுகள் திணறித் தத்தளிப்பதை கண்கூடாகப் பார்த்தும், கையைப் பிசைந்து கொண்டு நின்றவராகவே இருந்தார். அவரால், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
ஒசாமா பின் லேடனை வேட்டையாடியது அவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கிறது. அதுகூட, நீண்ட காலத்திட்டம். ஒபாமாவின் பங்கெல்லாம், அதிரடியாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்த அனுமதியளித்தது மட்டும்தான்.
கியூபா எல்லையில் குவாண்டனாமோ விரிகுடாவில், பயங்கரவாதிகளை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலை இருக்கிறது. ‘ஆட்சிக்கு வந்தால், அந்த சிறைச்சாலையை மூடுவேன்’ என்பது ஒபாமாவின் வாக்குறுதி. இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. ‘அதெல்லாம் முடியாது’ என்று, பாதுகாப்புத்துறை கூறி விட்டதாக, தகவல்கள் கசிகின்றன.
‘ஈராக், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவேன்’ என்பது ஒரு வாக்குறுதி. திரும்பப்பெறவும் முயற்சித்தார். ‘பயனில்லை’ என்று தெரிந்தநிலையில், இப்போது ஈராக்கிலும், ஆப்கனிலும், மீண்டும் அமெரிக்கப்படைகள் பாதுகாப்புக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒபாமாவின் வாக்குறுதி, முன்யோசனையற்ற, வெற்று வாக்குறுதி என்றே நிரூபணம் ஆகியுள்ளது.
‘ஒபாமாகேர்’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட சுகாதாரக் காப்பீடு திட்டம் மட்டுமே, அவரது பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் என்கின்றனர், அமெரிக்கர்கள்.
பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு காலம் முழுமையாக இருக்கும் நிலையில், சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக எதுவுமின்றி, படிக்காமல் தேர்வை எதிர்கொள்ளும் மாணவனை ஒத்த மனநிலையுடன் வெள்ளை மாளிகையில் உட்கார்ந்திருக்கிறார், ஒபாமா. ‘நம்மால் முடியும்’ என்ற அவரது கோஷத்தின் ஜாலத்தில் ஏமாந்த அமெரிக்கர்கள், சீரழிந்த நம்பிக்கையாகவே அவரைப் பார்க்கின்றனர்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அரசுக்கும் லாபம்; ‘ஆம் ஆத்மி’க்கும் லாபம்!

உற்பத்தி அதிகமாகவும், தேவை குறைவாகவும் இருக்கும் எந்த ஒரு பொருளும் விலை குறைவதுதான் இயற்கை. அந்த அடிப்படையில், உலகில் கச்சா எண்ணெய் விலை சரிவதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி சரியும் எண்ணெய் விலை, சர்வதேச அரசியல், பொருளாதார சூழலில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்கள், யாராலும் ஒதுக்கித் தள்ளி விட முடியாதவையாக இருக்கின்றன.
கச்சா எண்ணெயை அதிகமாக பயன்படுத்தும் நாடு, அமெரிக்கா. ஒரு காலத்தில் இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த அந்நாடு, ‘இப்படியே போனால், கட்டுபடியாகாது’ என்று கருதி, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அங்கு தேவைக்குத் தகுந்தபடி,  எண்ணெய் உற்பத்தியாகிறது.
விளைவு, காலம் காலமாக, அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து, டாலர் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்த சவுதி, நைஜீரியா, அல்ஜீரியா நாடுகளின் நிலைமை, திண்டாட்டம் ஆகி விட்டது. உற்பத்தியாகும் எண்ணெயை விற்றால்தான் வருமானம். ஆகவே, இந்நாடுகள், விற்பனைச் சந்தையை தேடிக்கொண்டிருக்கின்றன.
உள்நாட்டுப்போர் காரணமாக, உற்பத்தி தடைபட்டிருந்த ஈராக்கும், அதிலிருந்து பிரிந்து தனி நாடாக முயற்சிக்கும் குர்து தன்னாட்சிப் பிரதேசமும், நாளுக்கு நாள் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அணு ஆயுதம் தயாரிப்பு விவகாரத்தால் தடையில் சிக்கியிருந்த ஈரான், மீண்டும் முழு அளவில் கச்சா எண்ணெயை சந்தைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ரஷ்யா உள்ளிட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும், எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த உற்பத்திக்கு தகுந்தபடி, உலக நாடுகளின் தேவை, அப்படியொன்றும் பிரமாதமாக அதிகரித்து விடவில்லை. முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில், பொருளாதார தேக்க நிலை நீடிக்கிறது. குறைந்த எரிபொருள் பயன்படுத்தும்படியான வாகனத் தயாரிப்புகள் அந்நாடுகளில் அதிகரித்து விட்டன.
கச்சா எண்ணெயை அதிகப்படியாக இறக்குமதி செய்யும் நாடுகளில் மற்றொன்று சீனா. அங்கு, பொருளாதாரம் சில ஆண்டுகளாக ஆட்டம் கண்டு வருகிறது. தொழில் துறையை தேக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க அரசு படாதபாடு படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், உலக நாடுகளின் ஒரு நாள் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஒன்பது கோடியே 50 லட்சம் பீப்பாய்களாக இருக்கிறது. தேவைப்படுவது, ஒன்பது கோடியே முப்பது லட்சம் பீப்பாய்கள் மட்டுமே. அதாவது, நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய், உபரியாக இருக்கிறது. வரும் ஆண்டிலும் உற்பத்தியை காட்டிலும், நாளொன்றுக்கு குறைந்தது பத்து லட்சம் பீப்பாய்கள் உபரியாக இருக்கும் என்கிறது, நிபுணர்களின் கணக்கு. விலை சரிவதற்கு இதுவே பிரதான காரணம்.
கடந்த வார நிலவரப்படி, அமெரிக்கச்சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 35 டாலர்களுக்கு வந்திருக்கிறது. நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியாத, எண்ணெய் வள நாட்டுத்தலைவர்கள், அபயக்குரல் எழுப்பியபடி இருக்கின்றனர்.
கடந்த, 2008 ஜூலை மாதம், கச்சா எண்ணெய், பீப்பாய் 145 டாலர்கள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அந்த சில மாதங்கள், எண்ணெய் வள நாடுகளுக்கு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். டாலர்களை அள்ளிக் குவித்து விட்டனர். அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து, இந்த சில மாதங்களாக, விலை அதல பாதாளத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும், தொழில் துறை, உற்பத்தித்துறை குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகும்போதெல்லாம், கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே இருக்கிறது. ‘ஓபெக்’ என்ற பெயரில் செயல்படும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்போ, என்ன செய்வதென்று தெரியாமல், கையைப் பிசைகிறது. ஈரான், வெனிசுலா, அல்ஜீரியா போன்ற நாடுகள், உற்பத்தியை குறைப்பது பற்றி முடிவெடுக்கும்படி, ‘ஓபெக்’ அமைப்பை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமைப்பில் பிரதான பாத்திரம் வகிக்கும் சவுதி அரசு, அதற்கு தயாரில்லை.
உற்பத்தியை குறைத்தால், கூட்டமைப்பில் இல்லாத மற்ற நாடுகளிடம் சந்தையை இழக்க நேரிடும் என்று, சவுதி அரேபியா கவலைப்படுகிறது. 1980களில், விலைச்சரிவை தடுக்கும் நோக்கத்துடன், சவுதி அரேபியா, உற்பத்தியை மூன்றில் ஒரு பங்காக குறைத்தது; விலையும் உயர்ந்தது. ஆனால், சவுதி இழந்த சந்தையை, மற்ற எண்ணெய் வள நாடுகள் பிடித்துக்கொண்டு விட்டன. சந்தையை இழந்ததும், வருமானத்தை இழந்ததும் மட்டுமே சவுதி கண்ட பலன். அப்படி சூடு பட்ட காரணத்தால்தான், இம்முறை உற்பத்தியை குறைக்க மறுக்கிறது, அந்நாடு.
பெருமளவு அந்நியச் செலவாணியை கையில் வைத்திருக்கும் சவுதி அரசு, எவ்வளவு அடிபட்டாலும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், விலைச்சரிவை தாங்கிக்கொள்ள முடியாத வெனிசுலா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளில், பொருளாதாரம் படாதபாடு படுகிறது.
இந்த நாடுகளுக்கு, குறைந்தபட்சம் பீப்பாய்க்கு, 100 டாலர்களாவது கிடைத்தால்தான், சமூக நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்கிற தர்மசங்கடமான நிலை.
இப்படிப்பட்ட ஒரு எண்ணெய் விலை வீழ்ச்சியின்போதுதான், வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் திவால் ஆகிப்போனதாக, சர்வதேச ஊடகங்கள் வேறு பீதி கிளப்பியபடி இருக்கின்றன.
வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸ், ரஷ்யாவில் புதின் இருவருமே, கச்சா எண்ணெய் விலை உயர்வால், கதாநாயகர்கள் ஆனவர்கள். சாவேஸ் இறந்து விட்டார். அவருக்குப்பின் பதவி வகிக்கும் அதிபர் மதுரோ, இப்போது எண்ணெய் விலைச்சரிவால் வருவாய் இழந்து, மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்குகிறார்.
ரஷ்யாவில் விலை உச்சத்தில் இருந்தபோது, மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற்ற புதின், சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர்.  எண்ணெய் விலை வீழ்ச்சி அடைவது அவருக்கும் நிச்சயம் சிக்கல்தான். விலை தாறுமாறாக உயர்ந்தால், அவரை அடக்கி வைக்க நினைக்கும் மேற்கத்திய நாடுகளின் கனவில் மண் விழுந்து விடும் என்பது முக்கியம்.
விலைச்சரிவின் பின்னணியில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் சதி இருப்பதாகவும், சவுதி அதற்கு துணைபோவதாகவும், நீண்ட காலமாக கூறப்படும் புகார்களில் உண்மையும் கொஞ்சம் இருக்கிறது.
ரஷ்யா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு சவுதி உடந்தையாக இருப்பதாக, எண்ணெய் வளத்தை நம்பியிருக்கும் நாட்டு அரசியல்வாதிகள், புகார்ப்பட்டியல் வாசிக்கின்றனர்.
கச்சா எண்ணெயை அதிகப்படியாக பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அங்கு, ‘ஷேல்’ எனப்படும் களிப்பாறை எண்ணெய் எடுப்பது அதிகரித்து விட்டது. தரைமட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிக்கு கீழே, பாறைகளுக்கு மத்தியில் இருக்கும் எண்ணெயை, உயர் அழுத்தம் கொண்ட ரசாயனத்தை பீய்ச்சியடித்து வெளிக்கொண்டு வருகின்றனர். இதற்கு செலவும் அதிகம். விலை தாறுமாறாக சரிந்தால், இப்படி எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டு விடும் என்பது சவுதி, கத்தார், அமீரக நாடுகளின் எண்ணமாக இருக்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
யாருக்கு லாபம்
சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இலங்கை, வங்கதேசம் போன்ற, தேவைக்கும் குறைவான எண்ணெய் உற்பத்தி கொண்ட நாடுகளுக்கு, இப்போதைய விலைச்சரிவால் லாபம். இவர்களுக்கு அந்நியச் செலாவணி மீதமாகும். மீதமாகும் பணத்தை, மற்ற செலவினங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வந்திருக்கிறது. விலை குறைந்திருக்கும் இந்த வேளையில், கச்சா எண்ணெயை அதிகப்படியாக வாங்கி இருப்பு வைப்பதற்கும் சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
யாருக்கு நஷ்டம்
பெட்ரோலிய உற்பத்தியை பிரதான வருமானமாக கொண்டிருக்கும் அனைத்து நாடுகளுக்கும், விலைச்சரிவால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதில், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கத்தார் போன்ற பணமிகுதி கொண்ட நாடுகளுக்கு, நஷ்டம் இருந்தாலும், கடுமையான பாதிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கே, பெட்ரோலிய வருமானத்தை நம்பியிருக்கும் ரஷ்யா, வெனிசுலா, ஈரான், நைஜீரியா, ஈக்வடார், பிரேசில் போன்ற நாடுகளில் இந்த விலைச்சரிவு பல பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூக நலத்திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியாத நிலையை நோக்கி, இந்நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. வெனிசுலா, அல்ஜீரியா போன்ற நாடுகள் திவாலாகும் நிலையை எட்டிவிட்டன.
அமெரிக்காவை முதல் எதிரியாக கருதிக் கொண்டிருக்கும் ஈரானை, அந்த நாட்டுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு கொண்டு சென்றதும், இந்த விலைச்சரிவுதான். ‘திவால் நிலைமையில் இருக்கும் வெனிசுலாவை நம்பி இனி பயனில்லை’ என்று கருதியே, கம்யூனிஸ்ட் நாடான கியூபா கூட, அமெரிக்காவுடன் சமாதானத்துக்கு வந்து விட்டது என்றும், சர்வதேச அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவுக்கு லாபம்
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் மூன்றில் ஒரு பகுதி, கச்சா எண்ணெய் மட்டுமே. ஆகவே, கச்சா எண்ணெய் விலைச்சரிவானது, மத்திய அரசுக்கு நல்ல வாய்ப்பாக, அமைந்திருக்கிறது. மத்தியில் பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்தபின், 20 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விட்டதாக கூறிக்கொள்வதற்கு, ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது, இந்த விலைச்சரிவு. பண வீக்கத்தை குறைக்கவும், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்டவும், இந்த வாய்ப்பை அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
எண்ணெய் நுகர்வில் உலகில் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியா, தினமும் 32 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில் பயன்படுத்துகிறது. இதில், 17 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி, மற்றதெல்லாம் இறக்குமதி.
மத்தியக்கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என, 30 நாடுகளில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்தியா கொள்முதல் செய்யும் எண்ணெய்க்கு, துபாய், ஓமன் நாடுகளின் ‘புளிப்பு’ கச்சா எண்ணெய், வடக்குக்கடல் ‘பிரண்ட்’ ஸ்வீட் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விகிதாச்சார சராசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோலியப்பொருட்கள் விலை நிர்ணயம், மானியம் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக மத்திய பெட்ரோலியத்துறை, கச்சா எண்ணெய் விலையை கணக்கிட்டு அறிவிக்கிறது.
கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் குறைந்தாலும், இந்தியாவுக்கு, 8578 கோடி ரூபாய் மீதமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயரும்போதும், கச்சா எண்ணெய்க்கு இந்தியா செலவிடும் பணத்தின் மதிப்பு குறையும். அதாவது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஒரு ரூபாய் உயர்ந்தாலும், 12 ஆயிரத்து 328 கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சம். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ந்தால், நிலைமை தலைகீழ்.
ஒரு வேளை கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் அரிசி, தக்காளி, புளி வரை, அனைத்து உற்பத்திப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும். அதிகப்படியான பாதிப்பை தாங்கிக் கொள்ளப் போவது, அடிமட்டத்தில் இருக்கும் அப்பாவி நுகர்வோர் மட்டுமே.
ஆகவே, ‘நரி, இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதும்’ என்னும் எண்ணம் கொண்டிருக்கும் ‘ஆம் ஆத்மி’க்களுக்கு, எண்ணெய் விலைச்சரிவு, மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.